கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் மீனவர் வாக்குகள் உள்ளன. இதில் பெரும்பகுதியை திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ச்சியாக அறுவடை செய்துவருகிறது. அதற்கேற்ப மீனவரணியின் மாநிலச் செயலாளர் பதவியில் ஜோசப் ஸ்டாலின், மாநில இணைச் செயலாளர் பதவியில் பசலியான், மாநிலத் தலைவர் பதவியில் முன்னாள் எம்எல்ஏ-வான பெர்னாடு என குமரி மாவட்டத்துக்காரர்களையே அமர்த்தி இருக்கிறது திமுக. இதைப் புரிந்துகொண்டு பாஜகவும் இதே ரூட்டை பிடித்திருக்கிறது. பாஜக மீனவர் பிரிவு பெருங்கோட்டப் பொறுப்பாளராக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சகாயத்தை நியமித்திருக்கிறார் அண்ணாமலை.
ஏற்கெனவே பாஜக மீனவரணியின் மாநிலச் செயலாளராக இருக்கும் சகாயத்திற்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பவர்ஃபுல் மனிதராக வலம்வந்த சகாயம், பச்சைமால் அமைச்சராக இருந்தபோது அவரது உதவியாளராகவும் இருந்தார். தேரூர் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிப் பட்டியலிலும் இவர் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட சகாயத்தை வைத்து மீனவர்களின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப திட்டம் வகுத்திருக்கிறாராம் அண்ணாமலை!