இந்து சமூகத்தினரின் தாலிகளை பறித்து முஸ்லீம்களிடம் ஒப்படைத்து விடுவார்கள், ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என கூறுவது எல்லாம் பாஜகவினரின் தோல்வி பயத்தை காட்டுவதாக விசிக தலைவர் திருவமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாங்க் ஆஃப் பரோடாவின் ஓபிசி பணியாளர் சம்மேளனத்தின் சார்பில் 8வது அகில இந்திய கருத்தரங்கம் மற்றும் 30ஆம் ஆண்டு சம்மேளனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே பாஜக பயன்படுத்துகிறது. இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதிக்கு எதிரானவர்கள் இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கின்றனர். அவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சமூக நீதி கோட்பாட்டையும் காப்பாற்ற வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் 6 கட்ட வாக்குப்பதிவுக்கு பிறகு சமூக நீதிக்கு ஆதரவான பக்கம் மக்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர முடிந்துள்ளது. எனவே, இந்தியா கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பிரதமர் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் உரையாற்றும் கருத்துக்கள் பிரதமரின் பதட்டம் மற்றும் பயத்தைக் காட்டுகிறது. இந்து சமூகத்தினரின் தாலிகளை பறித்து முஸ்லீம்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என கூறியதும் சரி, ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என கூறுவதும் சரி, அவர்கள் பதட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஓடிசா மாநிலத்தில் பாஜக இனவாத கருத்துக்களை பேசி வருகிறது. ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ஒடிசா மாநிலத்தில் ஏற்கத்தகாத வகையில் உள்ள கருத்துக்களை முன் வைப்பது அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.