‘சட்டப் பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு தகுதியில்லை’

திருமாவளவன் சாடல்
‘சட்டப் பேரவையில் உரையாற்ற ஆளுநருக்கு தகுதியில்லை’

நாளை நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற  தகுதியற்றவர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"தமிழக ஆளுநர் தொடர்ந்து குதர்க்கமான கருத்துக்களை பேசி வருகிறார். தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். தமிழக ஆளுநர் வேண்டுமென்றே  பெரியார், அண்ணா முன்னெடுத்த அரசியலை பழிக்க வேண்டும் என்றும்,  அதற்கு எதிரான ஒரு கருத்தை, தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆர்.எஸ்.எஸ் தொண்டரைப் போன்று அவர் செயல்பட்டு வருகிறார். 

தனது  பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை அவர் மேற்கொள்ளலாம். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். இது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.

திமுக அரசின் கொள்கைக்கு எதிரானவர், திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் தமிழகத்தில் ஆளுநராக நீடிப்பதற்கு தகுதி இல்லை. நாளை சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை படிப்பதற்கு இவர் எந்த வகையிலும் பொருத்தமில்லை. திராவிட மாடல் என்று முதல்வரால் அழைக்கப்படுகிற திராவிட மாடல் அரசின் கொள்கையை முன்னிறுத்தக்கூடிய உரையை ஆற்றுவதற்கு அவர் எந்த வகையிலும் தகுதி படைத்தவர் அல்ல” என்ற திருமாவளவன், பின்னர் தமிழகத்தின் இதர நடப்பு பிரச்சினைகள் குறித்தும் பேட்டியளித்தார்.

அந்த வகையில் அவர் பேசும்போது, “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அநாகரீகத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். முதல்வர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். அவர்களை கைது செய்யக்கோரி வருகிற ஜனவரி 11-ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

ஈஷா மையத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர் எவ்வாறு யோகா மையத்தில் இருந்து வெளியேறினார்? ஏன் அவர் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டது? பிறகு சடலமாக கண்டெடுக்கக்கூடிய அவலம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இதனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in