நாம் இந்து மக்களுக்கு எதிராக பேசவில்லை. இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற சங்பரிவார் கும்பலின் நச்சு அரசியலை எதிர்க்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “சமூக நீதி மண்ணாக இருக்கிற தமிழ்நாட்டில் சனாதன கும்பலுக்கு இடமில்லை. நாம் எந்த இந்துவுக்கு எதிராகவும் பேசவில்லை. இந்து மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற சங்பரிவார் கும்பலின் நச்சு அரசியலை எதிர்க்கிறோம். இந்து மக்களிடம் இருக்கிற கடவுள் மற்றும் மத நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
சங் பரிவார் பேசுகின்ற அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்கிறார்கள். இந்துக்கள் இல்லாமல் எந்தக் கட்சியும் இயங்க முடியாது. இந்து சமூகம் பெரிய சமூகம். இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை நாம் கேள்விக்கு உட்படுத்தவில்லை. மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களை மோதவிடும் வேலையை சங் பரிவார் இயக்கங்கள் செய்கிறது. ஆர்எஸ்எஸ் கும்பலின் இந்த நச்சு அரசியலை எதிர்த்தால் நாம் இந்துக்களை எதிர்க்கிறோம் என்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்