`முதல்வர் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா?'- ஜெயக்குமார் காட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்’’அவர்களுக்கு இது இல்லை, அதனால் திமுகவின் ஜால்ராவாக உள்ளனர்’’ - காங்கிரஸ் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

''சூடு சொரணை இல்லாதது காங்கிரஸ் கட்சி அதனால் தான் திமுகவிற்கு ஜால்ராவாக பக்கவாத்தியமாக உள்ளனர்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் காமராசரை அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’வாய் கொழுப்பு, ஊழலில் திளைத்த ஆ.ராசா மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருகிறார். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என தெரிவித்த முதலமைச்சர் எதிர்க்கட்சிகளிடம் மட்டும் தான் தன்னுடைய சர்வாதிகாரத்தை காட்டி வருகிறார் என்றும் ஜனநாயக ரீதியாக அதிமுக தனது கருத்தைக் கூறினாலும் அதற்கு செவிக் கொடுக்காமல், ஆட்சியை விமர்சனம் செய்தால் வழக்குகள் போடுவது சிறையில் தள்ளுவது என இதைத்தான் செய்கிறார்.

மக்களுக்கு எந்தவிதமான நல்லதையும் செய்யவில்லை. பெருந்தலைவர் காமராசர் விடுதலைப் போராட்ட வீரர், சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் அவர் கொச்சைப்படுத்துவது சரியா?. ஆனால் இதனையெல்லாம் பார்க்கும்போது முதலமைச்சர் சொல்லித்தான் ஆ.ராசா இப்படி பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளை மதிக்காத ஒரு அரசாக இந்த அரசு உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள். காமராசர் குறித்து ஆ.ராசா பேசியதற்கு காங்கிரஸ் கருத்து தெரிவிக்க வில்லையே என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி ஜால்ரா, பக்கவாத்தியமாக திமுகவிற்கு உள்ளது. சூடு சொரணை உள்ளவர்கள் பேசுவார்கள். அவர்களுக்கு அது இருப்பதே தெரியவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் அவல நிலையை மக்கள் உணர்ந்து உள்ளனர். எங்களுடைய ஆட்சியின் சாதனை மக்களுக்கு நன்றாக தெரியும். அதனை மனதில் வைத்து ஈரோடு மக்கள் ஓட்டுப் போடுவார்கள். இரட்டை இலை வெற்றிப் பெறாது என டி.டி.வி.தினகரன் கூறியதற்கு பதிலளித்த ஜெயக்குமார், வாய்க்கலைத் தாண்ட வக்கு இல்லாதவர்கள் கடலை பற்றிப் பேசக் கூடாது’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in