
பசும்பொன்னிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை அனுமதிக்கக் கூடாது என சட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் தேவர் குருபூஜைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அனுமதிக்கக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை அந்த மாவட்டத்தின் சட்டக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் ‘’ வருகின்ற அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். இவர் முதலமைச்சராக இருந்த ஆட்சி காலத்தில் ஒரு முறை கூட இந்த குருபூஜை விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அனைத்து சமுதாயத்திற்கு எதிராக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மட்டும் 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து மற்ற சமுதாயத்தினரை மிகப்பெரிய பாதிப்பிற்கு உள்ளாக்கினார்.
குறிப்பாக இந்த இடஒதுக்கீடு முக்குலத்தோர் சமுதாய மக்களை மிகப்பெரிய அளவு பாதிப்பிற்கு உள்ளாகியது. ஆகையால் எடப்பாடி கே.பழனிசாமி முக்குலத்தோர் சமுதாய மக்கள் தெய்வமாக வணங்கும் புண்ணிய பூமியான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தரக்கூடாது என்பது முக்குலத்தோர் சமுதாய மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இவர் வருகை புரிந்தால் கண்டிப்பாக அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் புண்ணிய பூமியான பசும்பொன்னிற்கு வருகை தர வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டியும், அமைதியான முறையில் குருபூஜை நடத்த வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ எனக் கூறப்பட்டுள்ளது.