`அம்மாவின் தொண்டர்கள் களமிறங்கும் தருணம் இது'- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொங்கும் ஓபிஎஸ்

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - ஓபிஎஸ்`அம்மாவின் தொண்டர்கள் களமிறங்கும் தருணம் இது'- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொங்கும் ஓபிஎஸ்

தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்து சென்ற நம்பிக்கைத் துரோகி ஈபிஎஸ் என ஓபிஎஸ் காட்டமாக கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுத் தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை, அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளின் வலிவின்மையில்தான் இருக்கிறது என்றார் பேரறிஞர் அண்ணா. அதைத்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

அதிமுக என்னும் மாபெரும் இயக்கத்தை உருவாக்கி பத்தாண்டு காலம் தமிழ்நாட்டிற்கு பொற்கால ஆட்சியை அளித்தவர் எம்ஜிஆர். தலைவர் உருவாக்கியக் கட்சியை கட்டிக்காத்தவர் அம்மா அவர்கள். நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி என்ற நிலைக்கு எடுத்துச் சென்றதோடு, மக்களுக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்து கழகத்தை உச்ச நிலைக்கு எடுத்து சென்றவர் அம்மா.

இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கிய எம்ஜிஆர் நெற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், அம்மா அவர்களின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இந்த தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திமுக மீதான மக்கள் வெறுப்பை பயன்படுத்தத் தெரியாமல் வரலாறு காணாத தோல்வியை அதிமுக சந்தித்துள்ளது. மாண்புமிகு புரட்சித் தலைவர் கண்டெடுத்த வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்சநீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக் கொண்டோம்.

உச்சநீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய போது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தது.

'இரட்டை இலை' சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்.

'தான்' என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் படுதோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, இனி வருங்காலங்களில் அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

நீதியும், நேர்மையும் தவறாமல், நடுநிலையோடு சிந்தித்து, தர்மத்தின் பக்கம். நிற்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது.

எப்போதும் இல்லாத வகையில் தொடர் தோல்விகளால் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிற தொண்டர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, நடுநிலைமையோடு எல்லோரையும் அரவணைத்து கழகத்தை மூத்தத் தலைவர்கள் முன்னின்று நடத்துவதுதான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் நாம் செய்கிற நன்றிக் கடன் ஆகும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in