கோவையில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் அடையாளம் தெரிந்தது: அண்ணாமலை பகீர் தகவல்

கோவையில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் அடையாளம் தெரிந்தது: அண்ணாமலை பகீர் தகவல்

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவரின் பெயர் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேசா முபின்
காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த ஜமேசா முபின்

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் நேற்று அதிகாலை காரின் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நபர் உயிரிழந்த நிலையில், விசாரணைக்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், கார் வெடி விபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், அவர் பழைய துணி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கெனவே அவரிடம் 2019-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியதும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர், "கோவை சிலிண்டர் வெடிப்பு என்பது வெறும் சிலிண்டர் வெடிப்பு அல்ல. இது ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு கொண்ட பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியில் வந்து இதை ஒப்புக்கொண்டு தெளிவுபடுத்துவாரா?. தமிழ்நாடு அரசு இந்த தகவலை சுமார் 12 மணி நேரமாக மறைத்து வருகிறது. இது தமிழ்நாடு மாநில உளவுத்துறை மற்றும் திமுகவின் தோல்வி இல்லையா?.

குற்றம்சாட்டப்பட்டவர் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்பு உள்ளது. இதற்கு வெளிநாட்டில் இருந்து திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு மண்ணில் சில சக்திகள் இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றன. இனியாவது இறக்கமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் எதையும் மறைக்காமல் வெளியில் வந்து தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in