
அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டிச.28-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுகவின் ஒவ்வொரு அணியும் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள பல்வேறு செயல்களைச் செய்து வருகின்றன. அதன்படி அதிமுக ஈபிஎஸ் அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், பேரூராட்சிகள் ஒன்றியங்களில் திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஓபிஎஸ் அணி சார்பில் டிச.21-ம் தேதியன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமுமுக சார்பிலும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிச.28- ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட வாரியாக கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனைச் சந்திக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன. அதில் தங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? யாருடன் கூட்டணி சேருவது என்பதை பற்றி ஆலோசிக்க அதிமுகவினர் இவ்வாறாக தங்களுக்குள் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.