தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 13-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன் மீதான அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு அது, 2016-ல் நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு 2016 ம் ஆண்டு ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததால் புகார் அளிக்க இயலவில்லை என்று புகார்தாரர் மகேஷ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் செப்டம்பர் 13-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.