அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கு: அறிவுரை வழங்கிய நீதிபதிகள்

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிரான வழக்கு: அறிவுரை வழங்கிய நீதிபதிகள்

அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'அதிமுக நிறுவனர் எம்ஜிஆர், பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில்  முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது  அதில் இடைக்காலக் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அத்துடன்  பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம்   உத்தரவிட வேண்டும்  அவர்  கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி(பொறுப்பு) டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சூரியமூர்த்தி,  ஆங்கிலத்தில் உள்ள சில தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து படிக்க வேண்டியுள்ளதால் வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர். மேலும் நீண்ட அவகாசம் கேட்கக்கூடாது எனவும் மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in