ஈபிஎஸ் ஆதரவாளர் அறக்கட்டளைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஈபிஎஸ் ஆதரவாளர் அறக்கட்டளைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் நிர்வாகியாக உள்ள அறக்கட்டளையின் கல்வி நிறுவன கட்டடங்களை ஆய்வு செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஆர்.இளங்கோவன் என்பவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழ்நாடு மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்த இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துக்களை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் உள்ளிட்டோர் அறங்காவலர்களாக இருக்கும் முசிறியில் உள்ள சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களை மதிப்பீடு செய்யவும், அறக்கட்டளை குறித்த விவரங்களை வழங்கக் கோரியும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அறக்கட்டளைக்கும், நிர்வாக அறங்காவலர் என்ற முறையில் இளங்கோவனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் அறங்காவலர் என்.அருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறக்கட்டளை தரப்பில் 2006-ம் ஆண்டு முதல் செயல்படும் ஒரு பொது அறக்கட்டளையில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், அறக்கட்டளையின் ஆவணங்களை கோருவதும், மதிப்பீடு செய்வதும் சட்டவிரோதம் என்றும் வாதிடப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், அறக்கட்டளை நிர்வாகியாக இளங்கோவன் பொறுப்பேற்றபோது 17 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்த நிலையில், 2017 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையில் 234 ஏக்கர் நிலம் அறக்கட்டளை பெயரில் உள்ளதாகவும், அறக்கட்டளை நடத்தும் கல்வி நிலையங்களில் 14 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பிற்கு புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, அவற்றை ஆய்வு செய்யவே சம்மன் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அறக்கட்டளை கட்டிடங்களை மதிப்பீடு செய்வதையும், ஆவணங்களை கோருவதையும் ஆட்சேபிக்க முடியாது என்றும், புலன் விசாரணையின்போது ஆதாரங்களை சேகரிக்கும் விசயத்தில் தலையிட முடியாது என்றும் கூறி, அறக்கட்டளைக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in