உண்மை சரிபார்ப்புக்குழுவை தமிழ்நாடு அரசு அமைப்பதில் என்ன தவறு?: அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

தவறான செய்திகளைக் கண்டறிவதற்காக தமிழக அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக்குழு, ஒரு தணிக்கை அமைப்பு தானே? இதில் என்ன தவறு என  சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அனைத்து ஊடக தளங்களிலும் தமிழ்நாடு அரசு, அமைச்சகங்கள், துறைகள் தொடர்பாக வெளிவரக்கூடிய தவறான செய்திகளை கண்டறியும் வகையில், அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கக்கோரி அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில்,  சமூக வலைதளங்களில் தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பகிரப்படுவதைத் தடுத்து நடவடிக்கை எடுக்க சமூக ஊடகப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்று, கடந்த மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒரு வழக்கை முடித்து வைத்தது. ஆனால், தற்போது காவல்துறையை விட்டுவிட்டு உண்மை சரிபார்ப்பு குழு என அரசு  அமைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குடிமக்களின் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் மட்டும் அல்லாமல், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் முயற்சி.  காவல்துறையின் வரம்பிற்கு வெளியே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த அரசிற்கு எந்த அதிகாரமும் இல்லை. இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஒரு அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தள்ளிவைத்து உள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐயன் கார்த்திகேயன்
ஐயன் கார்த்திகேயன்

அத்துடன் அக்டோபர் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்கவும், திட்ட இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி  அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இதுசம்பந்தமாக மத்திய அரசு ஏற்கெனவே 2021-ல் விதிகள் வகுத்துள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழு, தகவல் தொழில் நுட்ப சட்ட விதிகளுக்கு முரணானது. இது அரசின் கையில் உள்ள ஆபத்தான ஆயுதம் எனவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பொய்ச் செய்திகள் பரவுவதைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாதா? இது ஒரு தணிக்கை முறை தானே? இதில் என்ன தவறு ? காவல்துறைக்கு உதவத்தானே அமைக்கப்பட்டுள்ளது என்று  கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், குழுவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஆகியோர், பீகார் தொழிலாளர்கள் தொடர்பான தவறான தகவல்கள் பரவியது குறித்து சுட்டிகாட்டினா். குழுவில் தகுதியான நபரைத்தான் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு நியமித்துள்ள உண்மை சரிபார்ப்புக் குழுவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் முடிவை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறி, அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in