அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும்: வலுக்கும் கோரிக்கை

ஆளுநர் ஆன்.என்.ரவி
ஆளுநர் ஆன்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பேசுகையில், திராவிட மாடல் என்ற வார்த்தை உள்பட தலைவர்களின் பெயரையும் வாசிக்காமல் தவிர்த்தார். இதை கண்டித்து, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசியதும், நிகழ்வில் பாதியிலேயே , தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார். அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு.

தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது. அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இது பொறுத்தமான பதிலடி. முதலமைச்சரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆளுநர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தைப் புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க்கட்சி போல ஆளுநர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது. அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான்‌ தமிழ்நாட்டின்‌ விருப்பம்.‌ சட்டமன்றத்தில்‌ எழும்பிய முழக்கம், தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்.‌ஆளுநரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில்‌, அனைத்து கட்சிகளும்‌ இணைந்து நிற்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முத்தரசன்.
முத்தரசன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் குறிப்பு அறிக்கையை ஆளுநர் படிக்க வேண்டியது அவரது பொறுப்பு. ஆளுநர் ஆங்கிலத்தில் படிப்பதை, பின்னர் பேரவை தலைவர் தமிழில் படிப்பார். இதுதான் சட்டபேரவையின் மரபு.. அமைச்சரவை தயாரித்து கொடுத்த கொள்கை அறிக்கையை அப்படியே முழுமையாக வாசிக்க வேண்டும் என்பது ஆளுநரின் பொறுப்பும் கடமையும். நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும், எந்த ஒரு ஆளுநரும் செய்யாத ஒரு தீஞ்செயலை ஆளுநர் ரவி செய்திருக்கிறார். இது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது. தனக்கு வேண்டியதை வாசிப்பது; வேண்டாததை விட்டுவிட்டு புறக்கணிப்பது ஆகிய செயல்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது..

ஆளுநரைக் கண்டித்து இதே பேரவையில் தீர்மானம் போட வேண்டும். இப்படி அமைச்சரவையின் குறிப்பை விட்டுவிட்டு படிப்பது ஆளுநரின் வரம்புக்கு மீறிய செயல். இது மிக மிக கடுமையான கண்டனத்திற்குரியது. இது ஒரு கட்சியின் பிரச்சினை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்குமானது. அந்த கட்சிகளுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்குமேயானால், இதற்கு கடுமையான முறையில் தங்களது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். ஆளுநர் இவ்வாறு செயல்பட்டதற்கு தமிழ்நாடு மக்களிடம் பகிரங்கமாக, உடனடியாக , நிபந்தனையற்ற முறையில் மன்னிப்புக் கோர வேண்டும். அவர் நினைப்பதெல்லாம் இங்கே செய்து கொண்டிருக்க முடியாது. அப்படி மன்னிப்பு கோரவில்லை என்றால், கடுமையான எதிர்விளைவுகளை ஆளுநர் சந்திக்க வேண்டிய நிலைமை நிச்சயமாக ஏற்படும் ” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in