தமிழக பல்கலைக் கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க ஆளுநர் ஆர்.என். ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. ஆளுநரின் நிகழ்ச்சியை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது மற்றும் கல்வி நிலையங்களில் ஆளுநர் அரசியல் பேசுவதைக் கண்டிப்பதும் தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களாக இம்மசோதா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளுநர் அலுவலகம் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இந்நிலையில் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்திற்குப் புறம்பானது என ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் துணை வேந்தர்களை அரசே நியமனம் செய்வது அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசின் துணைவேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தமிழக தலைமைச் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை ஆளுநர் எழுதியுள்ளார். இதன் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட சுமார் 10 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.