மாநிலத்தின் வளர்ச்சி என்பது ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியக் கூட்டம் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது, ஒரு துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட பகுதியின் வளர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. அனைவருக்குமான வளர்ச்சியாக இருந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும் என்ற வரையறையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
அரசின் பயன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதன்படிதான் திட்டமிடுகிறோம், செயல்படுத்துகிறோம். அரசின் கவனம் மிகுதியாக தேவைப்படுவோரில், குறிப்பிடத்தக்க பிரிவினர் மாற்றுத்திறனாளிகள். அவர்களது உரிமையைக் காக்கவும், சமுதாயத்தில் சமநிலையில் வாழ்வதை உறுதி செய்திடவும், 2011-ம் ஆண்டில், கலைஞரால் இது தனித்துறையாக உருவாக்கப்பட்டது.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய், இரண்டாயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதனால் 2 லட்சத்து 11 ஆயிரத்து 391 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.
மனவளர்ச்சிக் குன்றிய மற்று புறஉலக சிந்தனை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் தொழில் தொடங்க உதவி செய்ய குறைந்தபட்ச கல்வித்தகுதியினை 8-ம் வகுப்புத் தேர்ச்சியாக குறைத்தும் வயது உச்சவரம்பை 45 லிருந்து 55-ஆக உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் கட்டணமின்றி நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உதவித் தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி காத்திருப்போர் அனைவருக்கும் நிலுவையின்றி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தும், தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. வீடு வழங்கும் திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு 5 சதவீதம் வீடுகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது " என்று அவர் பேசினார்.