`நீட் தேர்விலிருந்து விரைவில் நாடு விடுதலை பெறும்'

கே.என்.நேரு திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
`நீட் தேர்விலிருந்து விரைவில் நாடு விடுதலை பெறும்'

"நீட் விலக்கு மசோதாவை இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. ஜனாதிபதிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் வேறு வழி கிடையாது என்று ஆளுநர் சொன்னார். விரைவில் நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்துவிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று மணவிழாவை நடத்திவைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பினை பெற்றமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். திருச்சி என்றால் அது நேருதான்! நேரு என்றால் அது திருச்சிதான்! அதேபோல் மாநாடு என்றால், அதுவும் நேருதான்! திருப்புமுனை மாநாட்டை திருச்சியில் பலமுறை நடத்திக் காட்டித் தலைவர் கலைஞருடைய உள்ளத்தில் ஒரு சிறப்புக்குரிய இடத்தை பெற்றவராக விளங்கிய தீரர் நேரு.

மேடையில் இருக்கும் மணமக்களையும், இந்த அரங்கத்திற்கு வருகை தந்து வாழ்த்திக்கொண்டிருக்கும் உங்களையும் பார்க்கிறபோது, எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அதிகமாக இருந்தாலும், அதேநேரத்தில் என் நெஞ்சில் ஒரு ஏக்கம், ஒரு கவலை இருந்து கொண்டிருக்கிறது. நேருவும் அதே உணர்வோடுதான் இங்கு இருக்கிறார். இந்த இடத்தில் ராமஜெயம் இல்லையே என்ற ஏக்கம் நேருவிற்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் இருக்கிறது. என்னுடைய அருமைத் தம்பி திருச்சியினுடைய தீரனாக விளங்கிய ராமஜெயம் இங்கு இல்லையே என்ற வருத்தம் நமக்கு இருந்தாலும், அந்த வருத்தத்தை எல்லாம் போக்கும் வகையில் நம்முடைய நேரு பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய தம்பியின் அருமை மகனுக்கு இந்த மணவிழா நிகழ்ச்சியை, கழகத்தின் மாநாடு போல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரிகிறது.

ராமஜெயத்தை நாம் இழந்தபோது, நேருவும், அவருடைய குடும்பத்தினரும் அடைந்த துன்பம் போலதான், நம்முடைய தலைவர் கலைஞரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; கவலைப்பட்டார்கள். அப்போது தலைவர் கலைஞர் முரசொலியில் எழுதிய இரங்கற் குறிப்பில், “நேருவின் தம்பி ராமஜெயத்தை நேரில் நின்று எதிர்க்க முடியாமல் எப்படியோ கடத்திக் கொண்டு போய் வீழ்த்திவிட்டது வீணர்கூட்டம். சிலையாய் நிற்கிறாய் நீ; புகழ் மலையாய் நிலைத்திருக்கும் உன் பெயர்;” என்று எழுதினார். அவரது வரிகள் வீண்போகாது என்பதன் அடையாளம்தான் இன்றைய தினம் ராமஜெயத்தின் இல்லத்தில் நடைபெறும் இந்தத் திருமணத்திற்கு ஆயிரக்கணக்கில், ஏராளமானோர் வந்து இதில் கலந்துகொண்டு அந்தக் குடும்பத்தின் செல்வங்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள்.

நேற்றைய தினம் நமக்கு ஒரு செய்தி; முதல்கட்டமாக வெற்றிச் செய்தி கிடைத்திருக்கிறது. அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்கு பெற வேண்டும்; அதற்குச் சட்ட முன்வடிவைச் சட்டமன்றத்தில் இயற்றி நாம் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பல மாதங்கள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு திடீரென்று ஒருநாள் அதைத் திருப்பி அனுப்பி வைத்துவிட்டார்கள். அதனால் உடனடியாக அடுத்து சட்டமன்றத்தைக் கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தைப் போட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இது நேற்றுவரையில் எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது என்ற செய்தி கிடைக்கவில்லை.

அதனால் நேற்றைய தினம் நான், நம்முடைய அண்ணன் துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் ஆளுநரை சந்தித்து அந்தக் கோப்பைப் பற்றி விசாரித்தோம். விசாரித்தபோது அவர் என்ன சொன்னார் என்றால், ‘எனக்கும் சட்டம் தெரியும்; இரண்டாவது முறை நான் அதைத் திருப்பி உங்களுக்கு அனுப்ப முடியாது. நான் ஜனாதிபதிக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும் வேறு வழி கிடையாது’ என்று சொன்னார்.

எனவே முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த நீட் தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேற்றைக்குக் கூட நாடாளுமன்றத்தில் நம்முடைய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு இதுபற்றி விளக்கமாக, விரிவாகப் பேசி, அங்கு இருக்கும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அது இன்றைக்குப் பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சிக்கு, இந்த ஆட்சியின் அமைச்சரவையில் இடம் பெற்று, மிகச் சிறப்பாக பணியாற்றி, இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களில் ஒருவராக, நேரு விளங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அவருடைய இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகின்றபோது உங்களோடு சேர்ந்து நானும் பெருமைப்படுகிறேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in