`எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது அறப்போர் இயக்கம்'- உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வாதம்

`எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கிறது அறப்போர் இயக்கம்'- உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வாதம்

எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2019, முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தததன் மூலமும், திட்டமதிப்பு அதிகப்படுத்தப்பட்டு இருந்ததாலும், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.

இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். மான நஷ்டஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென அறப்போர் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞரை வாதிட உத்தரவிட்டார். இதனையடுத்து வாதிட்ட ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது. ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை. டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை.

தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனமான அறப்போர் இயக்கம் நேரடியாக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளை வைப்பதே தவறு. முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படை குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் சமூக வலைதளங்களில் ஒரு குற்றச்சாட்டை கூறும் முன் அதை உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒரு நபர் குறித்து அவதூறு கருத்துகளை கூறிவிட்டு அதற்கு இழப்பீடு கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது. ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக கூறுவது மான நஷ்ட வழக்கு உட்பட்டது என்பதால் தம்மை குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in