
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளதால் தெலங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அந்த கட்சி அறிவித்துள்ளது தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவுக்கு வருவதால் நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுகின்றன.
அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆந்திராவில் இருந்து கடந்த 2014-ல் தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது முதல் அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார். கடந்த 2014 சட்டசபை தேர்தல், 2018 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்ற நிலையில் வரும் தேர்தலிலும் வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என கூறப்படுகிறது.
மேலும் பாஜக தெலங்கானாவில் போட்டியிட்டாலும் கூட நேரடி போட்டி என்பது பிஆர்எஸ் - காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் இதை தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரி மத்தியச் சிறையில் உள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கசானி ஞானேஸ்வர் சந்தித்து தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக விவாதித்தார். அப்போது தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து விலகி இருக்க சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தெலங்கானாவின் மாநில தலைவர் கசானி ஞானேஸ்வர், ''தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியிருக்கும். வரும் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டாது'' என கூறியுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவை பாஜக கேட்டுக் கொண்டுள்ளது. அதேபோல் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஆதரவையும் பாஜக பெற வாய்ப்புள்ளது. மக்களவைத் தேர்தலில் ஜனசேனா கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து