’’தமிழகத்தில் உடனடியாக மது விலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மது விலக்கு வேண்டும் என்ற கொள்கையில் இருந்து மார்க்சிஸ்ட் என்றைக்கும் பின் வாங்காது’’ என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜாஜி சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலனின் 76-வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘’இந்தியாவிலே முதன் முதலில் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்காக போராடியவர் சிந்தனையாளர் சிங்காரவேலன். நகர்மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அவர் உருவாக்கியது தான் இந்தியாவிலே முதன் முதலில் மதிய உணவுத் திட்டம் என்பது அவரால் கொண்டுவரப்பட்டது. அதுதான் படிப்படியாக வளர்ந்து காமராஜர் காலத்தில் மதிய உணவு, எம்ஜிஆர் காலத்தில் சத்துணவு திட்டமாகவும் தற்பொழுது காலை உணவு திட்டம் என பல திட்டங்கள் உருவாகி இருக்கிறது. அதற்கு அடிப்படை வித்திட்டவர் சிந்தனை சிற்பி சிங்காராவேலன்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். போராட்டம் நடத்தவில்லை, அறிக்கை வெளியிடவில்லை என்றால் அந்தக் கொள்கையில் இருந்து பின் வாங்கிவிட்டோம் என்று அர்த்தமில்லை. தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி அதனை தீர்ப்பதற்கு எப்பொழுதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும்’’ என தெரிவித்தார்.