மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கா. பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும், தமிழக ஆளுநர் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக பயன்படுத்துகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மதுரை வருகை தர உள்ளார். மேலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கா. பொன்முடி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் தேதியை அறிவித்தது கண்டனத்திற்குரியது. மேலும், நடைபெறவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "பல்கலைக்கழகங்கள், மாணவர்களிடையே தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலை புகுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மேடையினை பாஜகவின் பிரச்சார மேடையாக ஆளுநர் பயன்படுத்துகிறார்" என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், "மாநில அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதே ஆளுநரின் கடமை" என்றும் கூறியுள்ளார்.