
ஜிஎஸ்டியை பொறுத்தவரை தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேலாக மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கோவைக்கு வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கியதும், அதை செயல்படுத்துவதிலும் தமிழகம் தான் முதலிடம். அந்த அளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
ஜிஎஸ்டியை பொறுத்தவரை தமிழகத்திற்கு 4 ஆயிரம் கோடிக்கு மேலாக மத்திய அரசிடமிருந்து நிலுவைத் தொகை வர வேண்டி உள்ளது. மார்ச் மாதத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியானது 2020- 21க்கான நிதி ஆகும். இது தவிர மேலும் 3000 கோடிக்கு மேலாக ஜிஎஸ்டி வரவேண்டியது உள்ளது. மாதாமாதம் வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையும் தாமதம் ஏற்படுகின்றது.
ஜிஎஸ்டி மாடலில் மாறுதல் தேவை. ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய வழிமுறைகளை மிகவும் எளிதாக மாற்ற வேண்டும். மதுரையில் நடக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து எடுத்துரைக்கப்படும். பட்ஜெட்டை பொறுத்தவரை முதல்வரின் உத்தரவுப்படி திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
கல்விக்கடன் தள்ளுபடி, பெண்களுக்கான உரிமை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார். தமிழகத்தின் நிதியை பொறுத்தவரையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சரிவை சந்தித்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திலேயே நிதி பற்றாக்குறை குறைந்து வருகிறது, வருவாய் அதிகரித்துள்ளது. கடன் வாங்குவது குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தொழிலதிபர் அதானி பங்குகள் சரிந்து வருகின்றன. இது குறித்து நான் ஒரு நிதி அமைச்சராக பேசவில்லை. பங்குச்சந்தைகளில் பணிபுரிந்த அனுபவத்தில் பேசுகிறேன். இத்தனை ஆண்டு காலமாக பங்குச்சந்தையில் அதானி பங்குகள் குறித்து ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பாக ஆர்பிஐ, செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தற்போதுதான் அதானி பங்குகள் குறித்த விவாதம் நடைபெறுகிறது என்பது இல்லை, பல ஆண்டுகளாகவே இந்த விவாதம் நடந்து வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட குரல் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் தற்போதுதான் பூதாகரமாக எழுந்துள்ளது. மத்திய அரசு இதற்கு பதில் அளிக்க வேண்டும், அத்துடன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.