
ஆங்கிலேய ஆட்சி மாற்றத்தின் சாசனச் சான்று இச்செங்கோல். முறை தவறாத ஆட்சியின் குறியீடு என நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் குறித்து நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைப்பதுடன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் `செங்கோலை' நிறுவவிருக்கிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த போது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுண்ட் பேட்டனால் பெறப்பட்ட `செங்கோல்', இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை காங்கிரஸ் உட்பட 19 கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், கட்டிடத் திறப்பிற்கு ஆதரவாக பாஜகவினர் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டரில், ‘’ஆங்கிலேய ஆட்சி மாற்றத்தின் சாசனச் சான்று இச்செங்கோல். முறை தவறாத ஆட்சியின் குறியீடு, தன் உயிர் தந்து செங்கோல் நிமிர்த்திய தமிழர் மரபின் நீட்சியாய் மீண்டும் பாராளுமன்றத்தில் பாரதப் பிரதமரின் திருக்கரங்களால் நிறுவப்படுகிறது.
இனி நிலையான அமிர்தகால ஆட்சியை பறைசாற்றும். நேர்மையின் இலக்கணம் நம் பிரதமரை நினைத்து நாடே பூரிக்கும் இக்கணம். பாரத பிரதமருக்கு நன்றி. தலை வணங்குகிறேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.