
வருமானத்திற்கு அதிகமாக 74.93 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரிய சிபிஐயின் வழக்கில் பதில் அளிக்குமாறு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநில துணை முதல்வராக பதவி வகித்து வருபவர் டி.கே.சிவகுமார். இவர் கர்நாடகாவில், 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக புகார்கள் எழுந்தன.
2017 ஆகஸ்ட் மாதம், டி.கே.சிவகுமார் தொடர்புடைய 70 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக, 74.93 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக சிவகுமார் மீது, 2020-ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடக்கியது.
இதை எதிர்த்து சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு, நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி, "சிவகுமாருக்கு எதிரான இந்த வழக்கில், 90 சதவீதம் விசாரணை முடிந்து விட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தவறான அறிக்கையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
தடையை நீக்க மறுத்த அமர்வு, இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி, டி.கே.சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.