
நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துகள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்கள் கொண்ட பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
அப்போது பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்தார். ஆனால் எஸ்.வி.சேகர் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது. அவர் மீதான வழக்கை எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து எஸ்.வி.சேகர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, மக்கள் பணியாற்றக் கூடிய பொறுப்பில் இருப்பவர் இது போன்ற தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் ஏற்க முடியாது என கூறினர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் அதனை ரத்து செய்ய முடியாது எனவும் கூறி எஸ்.வி.சேகரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.