
உத்தரபிரதேசத்தில் ஆளுநருக்கு சம்மன் அனுப்பிய மாஜிஸ்திரேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றை துணை மண்டல மாஜிஸ்திரேட் வினீத் குமார் விசாரித்தார். இந்த வழக்கில் அம்மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலையும் சேர்த்து அவருக்கு சம்மன் அனுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அதில் உத்தரவிட்டு இருந்தார்.
அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் மாவட்ட நீதிபதி மனோஜ் குமாருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அரசியல் சாசன பதவி வகிக்கும் ஆளுநருக்கு நோட்டீசோ, சம்மனோ அனுப்ப முடியாது என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து துணை மண்டல மாஜிஸ்திரேட் வினீத் குமாரை மாவட்ட நீதிபதி மனோஜ் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வழக்கு விவரம்: உத்தர பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் ரூ.12 லட்சம் இழப்பீடு அளித்து அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும், இந்த இடத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து அரசுக்கு அளித்ததாகவும் கூறி சந்திரஹாஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலையும் ஒரு தரப்பாக அவர் சேர்த்திருந்தார். இதுதொடர்பாக விளக்கம் கோரி, கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென்னுக்கு நீதித் துறை மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பினார். இதற்கு ஆளுநர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்று எச்சரித்ததாகவும் மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.