திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா?

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா?

திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். ஈரோட்டை சேர்ந்த இவரது கணவரின் பெயர் ஜெகதீசன். இவர் திமுக சார்பில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1989-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஈரோடு தொகுதியிலும், 1977, 1996-ல் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொடக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1977-1980-ல் தமிழ்நாடு ஜவுளி, கடை, கைத்தறி, சிறு தொழில்கள், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்தார். 1989-1991 வரை தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. அரசு விழா மற்றும் திமுக நடத்தும் நிகழ்ச்சியில் இவர் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அண்மையில் விழுப்புரத்தில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. அவரை திமுக புறக்கணித்துவிட்டதாக தவவல் வெளியானது. இதனிடையே, இவரது கணவர் ஜெகதீசன், அண்மையில் சமூக வலைதளங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தலைமையில் இருந்து எந்த அறிவிப்பும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் தரப்பும் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in