`ஆதீனங்கள் பிச்சையெடுத்துதான் சாப்பிட வேண்டும், அதை செய்கிறார்களா?'-கொளுத்திப்போடும் சு.வெங்கடேசன்

`ஆதீனங்கள் பிச்சையெடுத்துதான் சாப்பிட வேண்டும், அதை செய்கிறார்களா?'-கொளுத்திப்போடும் சு.வெங்கடேசன்

"மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளன. ஆனால், அதையெல்லாம்விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது. அதற்கு அவர்கள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெறவுள்ள பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் பல்லக்கில் ஆதீனத்தை அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து தடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் தமிழகம் முழுவதும் எழுந்தன. உச்சகட்டமாக, எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானே நேரில் வந்து நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என்று சவால் விடுத்தார். மதுரை ஆதீனமோ, என் உயிரே போனாலும் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தியே தீருவேன், தருமை ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமரவைத்து நானே தோளில் தூக்கிச் செல்வேன் என்றார்.

இச்சூழலில், நீர்நிலை மற்றும் நத்தம் புறம்போக்கு நீர்வழி கரையோரம் நீண்டகாலமாகக் குடியிருக்கும் மக்களை வெளியேற்றக் கூடாது எனவும், அம்மக்களுக்குப் பட்டா வழங்கிட வேண்டும், மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் எம்பி சு.வெங்கடேசன் இன்று மனு அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆன்மிக தலைவர்கள் அரசியல் பேச களத்திற்கு வந்துவிட்டால் அரசியல் எதிர்வினை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படும். மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள் உள்ளன. ஆனால், இதையெல்லாம்விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது. அதற்கு மடாதிபதிகளும், ஆதீனங்களும் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தான் எல்லா மடாதிபதிகளும் வந்துள்ளனர்.

சன்னியாசி தர்மப்படி சாதுக்கள், ஆதீனங்கள் எங்கே போனாலும் நடந்துதான் போக வேண்டும். ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதையும் பிச்சையெடுத்துத் தான் சாப்பிட வேண்டும். அதனையும், ஓடும் நீரில் கழுவி சுவையில்லாமல் சாப்பிட வேண்டும் என உள்ளது. இதையெல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை. அதைப் பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி விட்டார்கள். எல்லோரும் மாறிக் கொண்டுள்ளனர். அதைத்தான் அரசும் சொல்கிறது. காலத்திற்கேற்ப மனிதனை மனிதன் தூக்கும் அடிமைத்தனம் மாற வேண்டும். பழமை வாதம் உதிரும்போது இந்தச்சத்தம் ஏற்படுவதாகவும், ஜனநாயகம் இந்த சத்தத்தை மீறி வெற்றி பெறும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in