
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் ஆட்சியர்கள், தொழில் மற்றும் வணிக சங்கப் பிரதிநிதிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்துரையாடினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு இன்று வந்தார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன்,மூர்த்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைய பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்கும், தென் தமிழகம் தொழில் வணிகத்தில் ஏற்றம் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காண சிறப்புக் கவனம் செலுத்தி வருவதற்காகவும் தங்களது பாராட்டுதல்களையும் நன்றியினையும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அவர்களின் பல்வேறு கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக அவர்களிடம் தெரிவித்தார்.