கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்: விசிக எம்.பி ரவிக்குமார் புகழாரம் சூட்டக் காரணம் என்ன?

ரவிக்குமார்
ரவிக்குமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் சமூகமும் நன்றிக்கடன்பட்டிருப்பதாக நெகிழ்ந்துள்ளார் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார். அதிலும் தண்டோரோ முறை ஒழிப்பினால் தந்தையை தனயன் மிஞ்சி விட்டார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “தண்டோரா போடுவதற்குக் கடுமையான தடை விதிக்கவேண்டும். மீறி ஈடுபடுத்துகிறவர்களைத் தண்டிக்கவேண்டும்” என தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த சமூக இழிவு துடைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நான் எழுப்பிவந்த கோரிக்கை நிறைவேறியிருக்கிறது.

கடந்த 25.7.2006 அன்று திமுக அரசின் முதல் பட்ஜெட் மீது பேசுகிற வாய்ப்பை எம்எல்ஏவாக இருந்த நான் பெற்றேன். அப்படி பேசுகிற நேரத்தில், “ திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று தமிழக முதல்வர் சிறப்பான அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப் பகுதிகளிலே தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கின்றது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையிலே, நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே, தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையிலே வைத்திருப்பதை இந்த உலகிற்குச் சொல்கின்ற ஒரு முறையாக இருக்கின்றது.

எனவே, அந்த தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றிலே ஒரு சிறப்பான இடத்தை நீங்கள் வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் “ என நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது கோரிக்கைகள் பலவற்றை நிறைவேற்றித் தந்த தலைவர் கருணாநிதி, ஏனோ இந்த வேண்டுகோளை நிறைவேற்றாமல் விட்டுவிட்டார். அதன் பின்னர் தமிழ்நாடு அரசால் பேராசிரியர் நன்னன் தலைமையில் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். அக்குழுவின் முதல் கூட்டத்திலும் இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.

கடந்த 2021-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்டோரா போட்டு மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பதாக செய்தி வெளியானது. அவரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூப்பிட்டுப் பாராட்டினார். அந்த நேரத்திலும் இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அது ஊடகங்களில் செய்தியாக வெளியானது.

இவ்வாறு கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்த கோரிக்கையை பலவிதங்களில் நான் முன்வைத்து வந்தேன். கடந்த நாளன்று காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிப்பு செய்யப்பட்ட செய்தி 1.08.2022 அன்று ஊடகங்களில் வெளியானது. அப்போது நான் உட்னே தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து ட்விட்டரில் பதிவு செய்தேன். அதைப் பல நண்பர்களும் வழிமொழிந்து பதிவுகளை வெளியிட்டார்கள். அதன் காரணமாகவே இப்போது தலைமைச் செயலாளரின் உத்தரவு வெளியாகி இருக்கிறது. பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்த இழிவைப் போக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தலைமைச் செயலாளர் இந்த உத்தரவைக் கடிதமாக எழுதியதோடு நிற்காமல் சட்டப் பாதுகாப்பு கொண்ட அரசாணையாக பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த ஆதிதிராவிட மக்களும் முதல்வருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது” என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார் எம்.பி ரவிக்குமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in