`100 யூனிட் மின்சாரம் கிடைக்கும்; நவ.28 முதல் டிச.31 வரை ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்'- அமைச்சர் அறிவிப்பு

`100 யூனிட் மின்சாரம் கிடைக்கும்; நவ.28 முதல் டிச.31 வரை ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்'- அமைச்சர் அறிவிப்பு

`மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது வரும் 28.11.2022 முதல் 31.12.2022 வரை நடைபெறும்' என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணையை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது ஒன்றிய அரசின் உரிய ஒப்புதல் பெற்று தமிழகம் எங்கும் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்ப்பதற்காகவும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது தமிழகத்தில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகை தினங்கள் தவிர்த்து ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும்.

பொதுமக்கள் இந்த தருணத்தினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பு முகாம்கள் மூலம் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. டிசம்பர் 31-ம் தேதி வரை பொதுமக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தினை எந்தவித சிரமமுமின்றி ஏற்கெனவே உள்ள நடைமுறையின் படி செலுத்தலாம். அதற்கு எந்தவித இடையூறும் இல்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது ஏற்கெனவே பொது மக்களுக்கான சேவை மேம்படுத்தும் பொருட்டு மின் நுகர்வோர்களின் தொலைபேசி எண்களை மின் இணைப்புடன் இணைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளை பெற்றிருக்கும் மின் நுகர்வோர்கள் பற்றிய விவரங்களை புதுப்பிக்கும் பொருட்டு அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு ஆதாரை இணைக்கும் பொழுது தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் கிடைக்க பெறுவதோடு, ஏற்கெனவே பெயர் மாற்றம் செய்யப்படாமல் இறந்துபோன, பழைய மின் இணைப்பு உரிமைதாரர்களின் பெயர்களில் இருக்கும் மின் இணைப்புகளை தற்போதுள்ள மின் இணைப்பு உரிமைதாரர்களுக்கு தகுந்த ஆவணங்களின்படி பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் இணைப்பு உரிமையாளர்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்கள் கிடைக்கப்பெறும்.

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதினால் வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே போன்று கைத்தறி மற்றும் விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாயம் மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவசம் மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்படும். ஆதாரை இணைப்பதில் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in