
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை கூடுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது.
அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறியிருந்த நிலையில், நிலுவையில் இருந்த மசோதாக்களை தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதில் குறிப்பாக, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா, பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா உள்ளிட்டவற்றை ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான மசோதா, கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான மசோதா, பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே செயல்படும் வகையிலான மசோதாக்களை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.