ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதங்கள் நியாயமான முறையில் பரிசீலனை: சொல்கிறார் சபாநாயகர் அப்பாவு!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

``ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகளின் கடிதங்கள் குறித்து நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும்'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு இன்று அளித்தப் பேட்டியில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் வாழை ஏல மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். இதேபோல் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவின் போதும் 6 கோடி மதிப்பீட்டில் களக்காட்டில் ஏல மையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். முதல்வர் சொன்னதை நிறைவேற்றுபவர். இன்று களக்காட்டில் வாழை ஏல மையம் மற்றும் மதிப்புக் கூட்டு மையப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்தில் இந்தப் பணிகள் முடிந்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வரும்.

தமிழக சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் தன்னைக் கலந்துதான் முடிவெடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவருமே சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது குறித்துக் கேட்கிறீர்கள். நான் நெல்லையில் இருப்பதால், இன்னும் அந்தக் கடிதங்களைப் படித்துப் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் இரு கடிதங்கள் கொடுத்துள்ளனர். அது என் பரிசீலனையில் உள்ளது. நான் சென்னை சென்றதும் கடிதங்களைப் படித்துப் பார்த்து நியாயமான முறையில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in