எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துகள் முடக்கம்!

சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் 2 பேரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க உத்தரவிட்டுள்ள சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடுகளில் கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். 63 இடங்களில் சோதனை செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கூட்டாளி நிறுவனமான கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.110 கோடியை முடக்க லஞ்சஒழிப்புத் துறையினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், “இந்த நிறுவன உரிமையாளர்கள் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் என்பதால், இந்தத் தொகையை முடக்கம் செய்யவேண்டும். கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் லிமிடெட் என்ற நிறுவனம் முதலீடு செய்துள்ள அந்த நிரந்தர வைப்புத் தொகையை முடக்கம் செய்யவேண்டும். முன்னாள் அமைச்சர் தொடர்பான விசாரணைக்கு இது உதவும் என்பதால் அதை முடக்க வேண்டும். இந்தத் தொகைகள் அனைத்தும் 2017-க்கு பிறகு முதலீடு செய்யப்பட்டுள்ளன என்பதால், இந்தத் தொகையானது முன்னாள் அமைச்சர் அரசு ஒப்பந்தங்களை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியதன் மூலம் கிடைக்கப்பெற்றவை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஓம் பிரகாஷ், முன்னாள் அமைச்சரின் கூட்டாளி நிறுவனங்களின் சார்பில் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.110 கோடியை முடக்கம் செய்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கே.சி.பி. இன்ப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ஆணை பிறப்பித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in