சுமுக நிலையை உருவாக்க முயற்சிக்கும் சோனியா!

ஜி-23 தலைவர்களுடன் பேசும் முயற்சிகள் பலன் தருமா?
சுமுக நிலையை உருவாக்க முயற்சிக்கும் சோனியா!

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தித் தலைவர்களான ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பிவந்தனர். கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றால், சோனியா காந்தி குடும்பம் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று அக்குழுவின் முக்கியத் தலைவரான கபில் சிபல் கண்டிப்பாகக் கூறியிருந்தார். எனினும், ஒருங்கிணைந்த முடிவுகள் எடுப்பது, ஒத்த கருத்து கொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைப்பது என்பன உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளுடன் ஜி-23 தலைவர்கள் தற்போது இயங்கிவருகின்றனர்.

இந்தச் சூழலில், ஜி-23 தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் கட்சித் தலைவர் சோனியா காந்தி. சில நாட்களுக்கு முன்னர் சோனியா - குலாம் நபி ஆசாத் சந்திப்பு நடந்த நிலையில், நேற்று அக்குழுவின் பிற முக்கியத் தலைவர்களான ஆனந்த் சர்மா, மணீஷ் திவாரி, விவேக் தன்கா ஆகியோர் நேற்று சோனியாவின் அழைப்பின்பேரில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா ஆகிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று அவர்கள் டெல்லியில் இல்லையென்பதால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இனி இதுபோன்ற சந்திப்புகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைமை குறித்த ஜி-23 தலைவர்களின் விமர்சனங்களுக்கு சோனியா குடும்பத்து விசுவாசிகள் கடுமையான பதிலடி தருகின்றனர். இந்தச் சூழலில், இணக்கமான நிலையை எட்ட இரு தரப்பும் தங்கள் அளவில் முயற்சிகளை எடுக்கின்றன. சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் சந்தித்தது, ராகுல் காந்தியை பூபேந்திர சிங் ஹூடா சந்தித்தது போன்ற நிகழ்வுகள் அதைத்தான் காட்டுகின்றன. ஜி-23 தலைவர்களுக்கு, கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வழங்குவது, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய காங்கிரஸ் தலைமை முன்வந்திருப்பதாகக் கருதப்படுகிறது.

மார்ச் 16-ல், டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் இல்லத்தில் ஜி-23 குழுவின் முக்கியத் தலைவர்கள் சந்தித்துப் பேசியபோது, சோனியா குடும்பத்துக்கு மிக நெருக்கமான தலைவர்களான மணிசங்கர் அய்யர், மக்களவை உறுப்பினர் பிரினீத் கவுர் (அமரீந்தர் சிங்கின் மனைவி), குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா, ஹரியாணா முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சர்மா போன்றோரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in