ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்தார் சோனியா காந்தி: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்!


ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்தார் சோனியா காந்தி: காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்!

கர்நாடகாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ யாத்ரா” எனப்படும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று பங்கேற்றார்.

கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட சோனியா காந்தி, உடல்நலன் காரணமாக சிறிது தூரம் மட்டுமே யாத்திரையில் பங்கேற்றார்.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக பல்லாரியில் நடைபெறும் பேரணியில் சோனியா காந்தி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, அவர் பேகூர் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று நேற்று வழிபாடு செய்தார்.

செப்டம்பர் 7 ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸின் நாடு தழுவிய 3, 750 கி.மீ நடைபயணம் செப்டம்பர் 30 ம் தேதி கர்நாடகாவில் நுழைந்தது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமிக்கு (செவ்வாய் மற்றும் புதன்) இரண்டு நாள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இன்று யாத்திரை தொடங்கியது.

கர்நாடகாவில் நடைபெறும் "பாரத் ஜோடோ யாத்திரை"க்காக சோனியா காந்தி திங்கள்கிழமை மதியம் மைசூரு வந்தார். இது தொடர்பாக பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், “சோனியா காந்தி கர்நாடக தெருக்களில் நடக்க வந்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம். பாஜக தனது கடையை மூடும் நிலையில் உள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in