சமாஜ்வாதியில் இணைந்த பாஜக தலைவர் ரீட்டா ஜோஷி மகன்

ஆளுநராகும் வாய்ப்பை இழந்தாரா?
சமாஜ்வாதியில் இணைந்த பாஜக தலைவர் ரீட்டா ஜோஷி மகன்
சமாஜ்வாதியில் இணைந்த பாஜக தலைவர் ரீட்டா ஜோஷி மகன்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து வாரிசு அரசியலை விமர்சித்திருந்தது. இதில் முக்கியமாகக் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தன. அதேசமயம் தனது கட்சியிலும் வாரிசுகள் இருந்தாலும், அவ்வப்போது சிலருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்து வந்தது பாஜக. இதன்மூலம், தம் கட்சி வாரிசு அரசியல் செய்வதில்லை எனக் காட்டியது.

இந்தவகை அரசியலில் தற்போது சிக்கியிருப்பவர் உத்தரப்பிரதேசம் பாஜகவின் மூத்த தலைவரான ரீட்டா பகுகுணா ஜோஷி. பாஜகவின் எம்.பியான ரீட்டா, மகன் மயாங் ஜோஷிக்கு தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டார். இதற்கு, ‘குடும்பத்திற்கு ஒருவர்’ என பாஜக நிபந்தனையை அவரிடம் சுட்டிக் காட்டியது பாஜக. ரீட்டா எம்.பியாக உள்ளதால், மகன் மயாங்கிற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக மிகவும் கவலைகொண்டவர், தன் மகனுக்காக எம்.பி பதவியையும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தும் பலன் கிடைக்கவில்லை.

இதனால், மனம் உடைந்த ரீட்டா, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவை டெல்லியில் அணுகினார். அவரும் தாமதமான வரவு எனக் கூறி வாய்ப்பளிக்கவில்லை. இச்சூழலில் தேர்தலுக்காக கட்சி மாறுபவர்கள் என தாய், மகன் மீது புகாரும் எழுந்தது. இதை சமாளிக்க வேறுவழியின்றி, மயாங் ஜோஷி, உபி தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவிற்கு சற்று முன்னதாக தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.

பாஜக தலைவர் ரீட்டா
பாஜக தலைவர் ரீட்டா

இதனால், முன்னாள் மத்திய அமைச்சருமான ரீட்டாவிற்கு ஆளுநராகும் வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்படுகிறது. 65 வயதிற்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத நிலை பாஜகவில் உள்ளது. இதில், ஒருசிலர் மட்டும் தவிர்க்கப்பட்டாலும், வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஆளுநர் உள்ளிட்ட பதவிகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு அளிக்கிறது. இது முன்னாள் மத்திய அமைச்சருமான ரீட்டாவிற்கும் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. தற்போது, மகன் மயாங்கினால் அந்த வாய்ப்பை ரீட்டா இழப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உபி பாஜகவின் மூத்தத் தலைவராக இருப்பவர் ரீட்டா பகுகுணா ஜோஷி. முன்னாள் காங்கிரஸ் முதல்வரான ஹேம்வதி நந்தன் பகுகுணாவின் மகளான இவர், 1995 முதல் 2000 வரை காங்கிரசின் அலகாபாத் மேயராக இருந்தார். 2003 முதல் 2012 வரை உபி மாநிலக் காங்கிரஸ் தலைவராகவும் தொடர்ந்தார். 2014 மக்களவை தேர்தலில் தலைநகரான லக்னோ தொகுதியில் போட்டியிட்டவருக்கு தோல்வி கிடைத்தது.

இதனால், கட்சி மாறியவர் 2016 இல் பாஜகவில் இணைந்தார். 2019 தேர்தலில் அவருக்கு பாஜகவில் அலகாபாத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் வென்ற ரீட்டாவின் மகன் மயாங் ஜோஷியும் கடந்த பத்து வருடங்களாகப் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். தன் தாய் போட்டியிட்டு வென்ற லக்னோ ராணுவக் குடியிருப்பு தொகுதியில் போட்டியிட சமாஜ்வாதியில் முயன்றார். அதுவும் கிடைக்காமல் தன் தாயின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டார் மகன் மயாங்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in