"தமிழகத்தில் இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் யாரும் ஆதீன விவகாரங்களுக்குள் நுழையவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதி செயல் நடைபெறுகிறது" என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆன்லைன் சூதாட்டத்தால் விலைமதிக்க முடியாத உயிரை பலர் இழந்து கொண்டிருக்கின்றனர். எனவே, ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டத்தை இயற்றி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஒரு ஆயுதப்படை காவலரே, கந்துவட்டி வாங்கி இறந்திருக்கிறார் என்று சொன்னால், கந்துவட்டியை தடை செய்ய இயலாத ஒரு அரசாகத்தான் தமிழக அரசை பார்க்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் திமுகவும் ஆட்சியிலிருந்தது, அதிமுகவும் ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் இந்த ஆதீன விவகாரங்களுக்குள் யாரும் நுழையவில்லை. இன்றைய ஆட்சியில் திட்டமிட்டு, ஏதோ ஒரு சதிச் செயல் நடைபெறுவதாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால், இன்று எந்த மதமாக இருந்தாலும், எந்த திருக்கோயில்களாக இருந்தாலும், அந்தந்த ஐதீகத்தின்படி வழிபாடு நடைபெற வேண்டும், அதுதான் முறை. அதுதான் காலங்காலமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, ஏதேதோ தவறான வழிகளில், யாருடைய பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். இது தவறான போக்கு" என்றார்.