சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக ஐ.டி விங்க் தலைவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக ஐ.டி விங்க் தலைவருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன்

சமூக வலைதளத்தில் தமிழக அரசு குறித்து அவதூறாக பதிவிட்ட பாஜக ஐ.டி விங்க் தலைவர் நிர்மல்குமார் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவராக இருப்பவர் நிர்மல் குமார். பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக தமிழகம் வர இருந்தாகவும், ஆனால் தமிழக அரசு சார்பில் மோடி வருகையையொட்டி  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதி அளிக்காததால் அவரது வருகை இந்த ஆண்டு தள்ளிப்போனதாக நிர்மல் குமார் அக்.13-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக மொகிந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் கடந்த மாதம் 14-ம் தேதி நிர்மல் குமார் மீது கலகம் செய்ய தூண்டுதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நிர்மல் குமாரிடம் பல்வேறு விளக்கங்கள் கேட்க வேண்டியுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் நிர்மல்குமார் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என சம்மனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுபான கொள்முதல், விற்பனையில் கமிஷன் பெறுவதாக பேசியதற்காக 10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்கக்கோரி நிர்மல்குமார் மீது அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கெனவே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in