காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த மோதலையொட்டி நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமை, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 8 வட்டாரத் தலைவர்களையும் மாற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர், சத்திய மூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை மாற்றம் செய்ய வேண்டும் என கே.எஸ்.அழகிரியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், கே.எஸ். அழகிரி புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் திடீரென சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் சிலரிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது பைக், கற்கள் போன்ற பொருட்களை வைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலால் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து சத்திய மூர்த்தி பவனில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் தான் காரணம் என்பதால் அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.