பிரதமர் மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல்; ஷியாம் ரங்கீலாவின் மனு நிராகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி - ஷியாம் ரங்கீலா
பிரதமர் நரேந்திர மோடி - ஷியாம் ரங்கீலா

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த பிரபல காமெடியன் ஷியாம் ரங்கீலா உட்பட 38 பேரின் மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இங்கு இறுதி கட்டமான 7வது கட்டத்தில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 14ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய வேட்பாளர்கள் அன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த மோடி
வேட்புமனு தாக்கல் செய்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி உட்பட 55 பேர் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் பிரபல காமெடியனான ஷியாம் ரங்கீலாவும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார். போட்டியின்றி வெற்றி என்ற நிலை உருவாகிவிடக்கூடாது என்பதற்காக பிரதமர் போட்டியிடும் தொகுதியில், வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக ஷியாம் தெரிவித்திருந்தார்.

ஷியாம் ரங்கீலா
ஷியாம் ரங்கீலா

நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், ஷியாம் ரங்கீலா உட்பட 38 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷியாம் ரங்கீலா, ”ஜனநாயகம் எப்படி படுகொலை செய்யப்பட்டது என்பதை நான் பார்க்கிறேன். செவ்வாய்க்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்வதை அதிகாரிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். சத்தியப் பிரமாணம் தொடர்பான ஆவணத்தை சமர்ப்பிக்காததால், எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட 17 பேர் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்களை திரும்பப்பெற நாளை 17ம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in