காங்கிரஸ் கட்சியின் கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசி தரூர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்.
கடந்த ஆண்டு இவர் வெளியிட்ட ஒரு செல்பி புகைப்படம் பெரும் பிரச்சினையை உருவாக்கியது. நாடாளுமன்றத்தில் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சசி தரூர் அப்போது பதிவிட்டிருந்தார்.
அதில், ‘‘மக்களவை வேலை செய்வதற்கு கவர்ச்சிகரமான இடம் இல்லை என்று யார் கூறுகிறார்கள்? இன்று காலை எனது ஆறு சக எம்.பி.க்களுடன்" என்று பதிவிட்டிருந்தார். இப்படம் வைரலானது.
‘‘நாடாளுமன்றத்தில் பெண்கள், பணியிடத்தை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்’’ என சசிதரூருக்கு பதிலடி தந்து கருத்துக்களைப் பின்னூட்டமாகப் பலர் பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார்.
தற்போது அடுத்த சர்ச்சையில் சசி தரூர் சிக்கியுள்ளார். மக்களவையில் ரஷியா, உக்ரைன் இடையேயான போர் விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்பியுமான பரூக் அப்துல்லா நேற்று பேசிக் கொண்டிருந்தார். அதைப் பற்றி கவவைப்படாமல் சசிதரூரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி பெண் எம்.பியான சுப்ரியா சுலேவும் அரட்டை அடிக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சசி தரூர் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டே, முன்னோக்கி குனிந்து, அவருக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த சுப்ரியா சுலேவுடன் பேசும் காட்சிக்கு, சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் 'ஸ்ரீவள்ளி' இந்தி பாடலை இணைத்து வீடியோவாக இணைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.