அதிமுக, பாஜக ஆதரவுடன் சேது சமுத்திர திட்டத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

அதிமுக, பாஜக ஆதரவுடன் சேது சமுத்திர திட்டத் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்தது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் நாகை மாலி, "தமிழ்நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்த சேது சமுத்திர திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக பல எண்ணற்ற போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம்" என்றார்.

மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா பேசுகையில், "தமிழருக்கு மிகப்பெரிய அளவில் உதவக்கூடிய சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முயற்சியை மனதார வரவேற்கின்றேன்" என்றார்.

பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "இந்த அரசின் தனித் தீர்மானத்தின் மீது ஆதரவா இல்லையா என்று மட்டுமே பேச வேண்டும். உறுப்பினர்கள் ராமாயணத்தை பற்றி எல்லாம் பேசி வருகிறார்கள். உறுப்பினர்கள் விமர்சித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மதத்தையோ தெய்வத்தையோ விமர்சித்து யாரும் பேசவில்லை என்றார். பின்னர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "சேது திட்டம் வருமேயானால் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இல்லை. மண் எடுக்க எடுக்க சரிந்து கொண்டே இருக்கும். ராமர் பாலம் சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றினால் ஆதரிக்கிறோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற சட்டசபையில் பாஜக ஆதரவு தரும்" என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், "2000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கிறது என்றார்.

மேலும், அதிமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

முதல்வல் ஸ்டாலின் பேசுகையில், "சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் கப்பல்களின் பயண நேரம் பெரும் அளவில் குறையும். தமிழ்நாடு, அண்டை மாநில துறைமுகங்களின் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும். சிறு, சிறு துறைமுகங்களை உருவாக்க முடியும். கடல்சார் பொருள் வர்த்தகம் விரிவடையும்" என்றார். இதையடுத்து, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in