திரிபுராவில் இடதுசாரிகள் கூட்டணிக்கு பின்னடைவு: மேகாலயாவில் காங்கிரஸுக்கு சறுக்கல்

சிபிஎம் காங்கிரஸ்
சிபிஎம் காங்கிரஸ்திரிபுராவில் இடதுசாரிகள் கூட்டணிக்கு பின்னடைவு: மேகாலயாவில் காங்கிரஸுக்கு சறுக்கல்

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவிற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா, நாகாலாந்தில் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாஜக கூட்டணி 30 இடங்களிலும், இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களிலும், திப்ரா மோதா கட்சி 13 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

60 இடங்களைக் கொண்ட மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஆளும் தேசிய மக்கள் கட்சி 22 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 7 இடங்களிலும், பாஜக 8 தொகுதிகளிலும், யுடிபி 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மேகாலயாவில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்களை எந்தக் கட்சியும் பெறாத சூழ்நிலை நிலவுகிறது.

அதேபோல 60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் என்டிபிபி-பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும், என்பிஎப் 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் அக்கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in