உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு: அமலாக்கத்துறைக்கு முன்பாகவே முந்திய அமைச்சர் செந்தில் பாலாஜி!

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு: அமலாக்கத்துறைக்கு முன்பாகவே முந்திய அமைச்சர் செந்தில் பாலாஜி!

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் செந்தில் பாலாஜி மீது மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த மோசடியின் மூலமாகச் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைக் கடந்த 1-ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் ராம்சங்கர் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in