
புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது.
இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல களேபரங்கள் அரங்கேறின. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை ரெய்டு நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.