தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸை வெற்றிபெறச் செய்வதன் மூலம், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய சந்திரசேகர் ராவையும், அவரது குடும்பத்தினரையும் நிரந்தரமாக பண்ணை வீட்டுக்கு அனுப்புங்கள் என, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பிரச்சாரம் செய்தார்.
தெலங்கானா மாநிலம், ஹணம்கொண்டா மாவட்டம், வாரங்கால் மேற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நைனி ராஜேந்தர் ரெட்டி, வர்தன்னாபேட்டை தொகுதி வேட்பாளர் கே.ஆர்.நாகராஜூ ஆகியோரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட டி.கே.சிவகுமார், “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது தெலங்கானாவில் உள்ள மக்கள் அதை கொண்டாடினர். அதேபோல் தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் கர்நாடக மக்கள் அதனை கொண்டாடுவர்.
2018 சட்டப் பேரவைத் தேர்தலின்போது, தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சந்திரசேகர ராவ் ஏமாற்றிவிட்டார். சந்திரசேகர் ராவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அவரும், அவரது குடும்பத்தினரும் பண்ணை வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் அளித்துள்ள 6 வாக்குறுதிகள் குறித்து பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா இல்லையா என்று பிஆர்எஸ் கட்சியினர் கர்நாடகாவுக்கு வந்து பார்த்து தெரிந்துகொள்ளட்டும். தெலங்கானாவில் பட்டியலினத்தை சேர்ந்தவர் மாநில காங்கிரஸ் தலைவராக்கப்பட்டுள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பின்தங்கிய மக்களுக்கு உரிய நீதி நிலை நிலை நாட்டப்படும்” என்றார்.