
பிரதமர் ஆவதற்கான அனைத்தும் தகுதியின் அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையத்தில் அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜு, "அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்போது அல்வா கொடுத்துள்ளனர் திமுகவினர். ஆனால் அதிமுக அரசு, அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர் அதேபோன்று அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலை இல்லா அரிசி என பாரபட்சமின்றி வழங்கியது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மதுக்கடைகள் மூடப்படும் என்றும், ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் கிடைக்காது என்றும் தெரிவித்திருந்தனர், ஆனால் தற்போது, பாட்டிலுக்கு பத்து ரூபாய் கமிஷன் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜி அதனை தொடங்கி வைத்தார்; தற்போது முத்துசாமி தொடர்ந்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கே போகிறது என தெரியவில்லை.
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து சூட்சமம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது கையெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது. அதனாலேயே 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்று இதன் மூலம் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். அதிமுக ஆட்சி தொடர்ந்தால் மதுரை மெல்பர்ன் நகரம் போன்றும், வைகை நதியை தேம்ஸ் நதி போன்றும் மாற்றுவோம் என்று நான் தெரிவித்தது நடந்திருக்கும்.
எங்கள் மீது துரும்பு வீசினால் நாங்கள் பதிலுக்கு தூணை வீசுவோம். அதிமுக தேன் கூடு போன்றது; கொட்டினால் தாங்க முடியாது. தமிழக பாஜகவில் ஃபாஸ்ட் ஃபுட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள ரவுடிகள் அனைவரும் இன்றைக்கு பாஜகவில் தான் உள்ளனர். மெத்தப் படிச்சவனுக்கு பத்தும் போயி பித்துப் பிடித்தது போன்று கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவன் தற்போது ஊர் ஊராக நடந்து செல்கின்றான்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம்; அதற்கு எந்த அளவுகோலும் இல்லை. குறிப்பாக, கொரோனா தொற்று பரவல் காலத்தில் டாஸ்மாக், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வருவாய் இல்லாமல் கஜானா காலியான போதும் பொருளாதாரம் நிலைகுலையாமல் கொரோனா தாக்கம் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமராக ஆகக்கூடாது.
அன்றைக்கு மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக இருக்கிறது என்று தெரிவித்தது. எனவே, பிரதமராக வருவதற்கான அனைத்துத் தகுதியும் எடப்பாடியாருக்கு இருக்கு" என்றார்.