
வங்கியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தங்கக் கவசத்தை அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே ஸ்காட் ரோடு பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
"சுதந்திரத்திற்காக வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளோம். முன்னதாக மதுரையில் இருக்கக்கூடிய மருது பாண்டியர்களின் சிலைக்கு தற்போது மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளோம்.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரைக்கு வந்து மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் செல்கிறார்.
அவருக்கு மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளோம். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். மதுரை அண்ணாநகரில் வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கக்கூடிய தங்க கவசத்தை நீதியரசர்கள் தீர்ப்பின்படி இந்த ஆண்டு அதிமுகவின் பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முறைப்படி பெற்று அதன் வாரிசுதாரர்களிடம் ஒப்படைப்பார்" என்று தெரிவித்தார்.