அண்ணா மீது சத்தியம் செய்வீர்களா முதல்வரே?- நிறைவேற்றப்படாத திமுக தேர்தல் வாக்குறுதியை பட்டியல் போட்ட சீமான்!

அண்ணா மீது சத்தியம் செய்வீர்களா முதல்வரே?- நிறைவேற்றப்படாத திமுக தேர்தல் வாக்குறுதியை பட்டியல் போட்ட சீமான்!

காற்றில் பறக்கவிட்டத் தேர்தல் வாக்குறுதிகள் பல இருக்கையில் அவற்றை நிறைவேற்றி விட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்வதா? உளச்சான்று உறுத்தவில்லையா முதல்வரே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக முதல்வரை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சனநாயகத்தால் நிறுவப்படும் ஓர் அரசை நாட்டின் குடிகள்தான், மதிப்பிட வேண்டும். ஆட்சி முறைமைகளில் நன்மைகள் நிகழ்ந்தால் அவர்களாகத்தான் போற்றிக் கொண்டாட வேண்டும். ஆனால் இங்கோ, ‘நூறாண்டு போற்றும் ஓராண்டு சாதனை’ என ஆட்சியாளர்களே அரசுப் பணத்தில் விளம்பரம் செய்துச் சுயதம்பட்டம் அடிக்கும் கேலிக்கூத்துகளும், 'நல்லாட்சியின் நாயகன்' எனத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக்கொள்ளும்நாடகங்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன.
தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றிடாத ஆட்சியாளர் பெருந்தகைகள், நாட்டையே மாற்றிப் படைத்து, நல்லாட்சி தந்து கொண்டிருப்பதாகக் கூறுவது வெட்கக்கேடானது!

தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டதாக தற்பெருமையோடு கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். எப்போது, எங்கே நிறைவேற்றினீர்கள் முதல்வரே? அவற்றை எல்லாம் மக்கள் அறிவார்களா?

நீட் தேர்வுக்கான விலக்கு மாநில அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என அறிந்திருந்தும், புதிய சூத்திரம் வைத்திருக்கிறோம், ரகசியத்திட்டம் வைத்திருக்கிறோம், அவற்றால், நீட் தேர்வுக்கான விலக்கைப் பெறுவோம் என மேடைதோறும் முழங்கினீர்கள். உங்கள் ஆட்சியில் இதோ இரண்டாவது நீட் தேர்வும் வந்துவிட்டது. என்ன ஆயிற்று அந்த சூத்திரம், ரகசியமெல்லாம்? அவையும் மறந்துபோனதா?

ஏழு தமிழர் விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம் என்றீர்கள்! தம்பி பேரறிவாளன் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்ற விடுதலைத் தீர்ப்பு, ஆறுபேர் விடுதலைக்கான திறவுகோலாகக் கிடைத்தும், அதனைக்கொண்டு, ஆளுநருக்கு அழுத்தம் தந்து விடுதலையைச் சாத்தியப் படுத்தாமல் நிற்பதேன்?. சமூக நீதியின் அடிப்படையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் தரப்படும் என்றீர்கள். இப்போது அதற்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், நிதிநிலை சரியான பிறகு கொடுப்போம் என்றும் சாக்கு போக்குச் சொல்கிறீர்கள்.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால், பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டும் விலையைக் குறைத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களைச் சுமந்து செல்லும் கனரக வாகனங்களுக்கான டீசல் விலையில் அதுகூடக் குறைக்காமல் விட்டீர்கள். எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவித்தீர்கள். இன்றோ அதுகுறித்தான பேச்சே எழவில்லை.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில், லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க, குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும். அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையானக் குடிநீர் வழங்கப்படும், தமிழக ஆறுகள் அனைத்தும் மாசடையாமல் காக்க, ‘தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம்’ உருவாக்கப்படும்,

கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில், சொத்து வரி அதிகரிக்கப்படாது, நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும், குடிசைகளே இல்லாதத் தமிழகம் உருவாக்க 'சிறப்பு வீட்டுவசதித் திட்டம்' கொண்டு வரப்படும் போன்ற வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்தீர்கள். பிறகு, தற்காலிகப் பணியாளர்களாகவே அவர்களை வைத்திருக்கவும் காலிப் பணியிடங்களுக்கும் தற்காலிக ஆசிரியர்களையே நியமிக்கவும் ஆண்டுக்கணக்கிலான ஒப்பந்த முறையைக் கொண்டு வருவோம் என்றீர்கள்.

தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதற்குத் தடை விதித்திருப்பதுடன் 'நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல்?' எனக் கேள்வியும் எழுப்பி உள்ளது. இப்படியெல்லாம் சொல்வதொன்றும் செய்வதொன்றும்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் லட்சணமா?

தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க, சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது?

30 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தீர்கள். அதையும் முழுமையாகச் செய்தபாடில்லை. இதுதான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய லட்சணமா? இவை மட்டுமின்றி, அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறைகேட்கும் முகாம்கள் நடத்தப்படும், ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும், நடைபாதை வாசிகளுக்கு இரவுநேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்,

இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லாப் பேருந்துகள் தமிழக மாநகராட்சிப் பகுதிகளில் இயக்கப்படும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், ஏழை மக்களின் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும்,

மத்திய அரசுப் பள்ளிகள் உள்பட தமிழ்நாட்டுப் பள்ளிகள் அனைத்திலும் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம் ஆக்கிடச் சட்டம் கொண்டு வரப்படும், தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்

அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதிகள் என்ன ஆயிற்று?

வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய்வித்து போன்றவைக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும், தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க வற்புறுத்துவோம் என்ற வாக்குறுதிகள் நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நீர்ப்பாசனத்துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்; நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்; முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றெல்லாம் அடுக்கடுக்காக அறிவித்தீர்கள்! என்னவாயின அவையெல்லாம்?

அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணிகளில் உள்ள அனைத்து பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலை என்ன?

இந்தியாவில் வசிக்க விரும்பும் அகதிகளுக்கு இந்தியக்குடியுரிமை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த உலக நாடுகளை ஒன்றிய அரசு வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதிகள் குறித்து வாய் திறக்காமல், தமிழின நீதியைப் பேச மறுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுவெல்லாம்தான் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய லட்சணமா?

இப்படி உங்களால் நிறைவேற்றப்படாத வெற்று வாக்குறுதிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன! உண்மை இவ்வாறிருக்க, தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றி விட்டதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? அப்படிக் கூற உங்களின் உளச்சான்று உறுத்தவில்லையா? கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டீர்கள் என அண்ணா மேல் ஆணையாகத்தான் உங்களால் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே..?'' என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in